Sunday, July 27, 2008


முருகா ..! வரம் தருவாய் !


ஆடி கிருத்திகையில் ஆடி வந்தோம் உன்

அருமை பெருமைகளை பாடி வந்தோம்

கூடி காவடி எடுத்து வந்தோம் எங்கள்

குடும்பம் தழைத்தருள வேண்டுமையா !


நாடி உன்னை காண நடந்து வந்தோம்

நல் வாழ்க்கை வேண்டியே நயந்து வந்தோம்

தேடிக் குறைகளைக் கூற வந்தோம்

தெளிவினை எங்களுக்குத் தாருமையா !!!!






Saturday, July 26, 2008



வாழ்க வளமுடன் !

இந்த மலர்ச் சிரிப்பு என்றும் தொடர

இமையும் கண்ணுமாய் இணைந்தே நிற்க

சொந்த முயற்சியால் சிகரதைத் தொட

சொல்லும் மனமும் இரண்டற இயங்க

அந்தமும் ஆதியும் இல்லான் அருளால்

அமுதும் தேனுமாய் ஆனந்த வாழ்வை

"சந்திர பிரபாவுடன் இராமலிங்கம்

சங்கீத ஸ்வரங்களாய் வாழ்க! வாழ்க"

Friday, July 25, 2008


திருக்குற்றாலம் !

சாரல் நனைக்கும் சங்கதி பாடும்

ஆரல் துள்ளும் அழகு சிரிக்கும்

ஊரல் பறக்கும் உள்ளம் களிக்கும்

வேரல் நுனி நீர் வேதம் சொல்லும்


மானின் பாச்சல் மந்தியின் தாவல்

கானல் மயிலின் களிதரு நடனம்

வானத்து கங்கையாய் வழிந்திடும் அருவி

சீனத்து மத்தாப்பாய சிதரிடும் மாட்சி

மண்ணும் மணக்கும் மரமும் மருவும்

விண்ணும் ஒழுகும் விரகம் தீர்க்கும்

கண்ணும் குளிரும் காட்சிகள் மாறும்

பண்ணும் இசைக்கும் பரதம் பிறக்கும்

மயக்கும் மாருதம் மலர்களைத் தழுவும்

மயங்காத வண்டுகள் ரீங்காரம் பாடும்

இயற்கையின் சிரிப்பை இசைந்தே காண்பாய்

இயல்பாய் வணங்கு இறைவன் அருள்வான்!




Thursday, July 24, 2008



ஆடி வெள்ளி தேடி வணங்கு !

மாரியம்மன் சன்னதிக்கு வந்து சேருங்கள்
மாவிளக்கு முளைப்பாரி எடுத்து வாருங்கள்
சீரோடு சிறப்பான வாழ்க்கை வேண்டுங்கள்
சிம்மவாகினி அவளிடமே சரணடையுங்கள்

திருமகளின் பெருமைகளை திசை பரப்புங்கள்
தீராத
வினைகளுக்கு முடிவு கட்டுங்கள்
அன்னை
ஆதிசக்தி அருள் வேண்டி நில்லுங்கள்
ஐநூற்றுவர்
குலம் தழைக்க வேண்டிக்கொள்ளுங்கள்


அடுத்த பிறவி
ஊமையாய் முடமாய்

பேயாய் குருடாய்

கூனாய் செவிடாய்

பித்தாய் பிணியுடனா

பிறப்பித்தான் உன்னை ?

கண்ணும் காதும் வசமாக்கி

கையும் காலும் செயலாக்கி

எண்ணும் எண்ணம் நலமாக்கி

ஏழ்மை நீக்கு என்றான் அவன்

நாக்கால் சுடுகிறாய்

நானென்று அலைகிறாய்

நம்பி வந்தவரையும்

நட்டாற்றில் விடுகிறாயே !

அடுத்து வரும் பிறவிக்கு

அச்சாரம் போட்டு விட்டாய்

கெடுப்பதை நிறுத்தா விட்டால்

கேடு கெட்ட பிறவி வரும் !

Wednesday, July 23, 2008

இதயத்தை அறிவுடன் பேசவிடு


உன்னைப் படைத்த இறைவன்

ஊனம் ஏதும் வைக்கவில்லை

உன்னத வாழ்வு உனக்கென்று

உழைத்தால் பெறலாம் உறுதி என்றான்

எறும்பு சேர்க்கும் தானியத்தை

என்றாவது ஒருநாள் கண்டதுண்டா

துரும்பைக் கூட அசைக்காமல்

தூங்கித் தின்பதில் சுகம் என்ன?

எத்தனை பிறவிகள் எடுத்தாலும்

ஏதோ நல்லது நீ செய்தால்

அத்தனை பிறவியும் பயனாகும்

அகிலமே உன்னைப் பாராட்டும்

மனித உயிராய்ப் பிறந்துவிட்டு

மற்றைய உயிர்களுக் கென்ன செய்தாய்

இனியும் தாமதம் தவிர்த்துவிடு

இதயத்தை அறிவுடன் பேசவிடு !
அதிர்ஷ்டக் கல்

கல்லை மாற்றிப் போடு

கஷ்டங்கள் தீர்ந்து போகும்

சொல்லை நம்பா விட்டால்

சோற்றுக்கே பஞ்சம் வரும்

எல்லை இல்லா சக்தி பெற

எங்களிடம் மட்டும் வாங்கு

நல்லது நடப்பது உறுதி

நமக்கா? கடைக்காரருக்கா?!

Tuesday, July 22, 2008

நாடாளுமன்றம்

லஞ்சம் வாங்கியதற்கு தண்டித்த சபையில்

லட்சம் கோடியாகப் பணக்கட்டுகளாம்

எந்த அரசு இதைக் கணடிப்பது என்றால்

சணடையே அதற்குதான் என்கிறார்கள்!

Sunday, July 20, 2008

திருட்டுப் போனது !

திருட்டுப் போனதென புகார் கொடுத்தவுடன்

திருடனைப் பிடிக்க ஒரு ஜீப் வந்தது

விரிவான விசாரணை விரல்ரேகை என

விரைவான செயலுக்கு எதுவும் வாங்கவில்லை

நாட்கள் நகர்ந்தன நாளொருவர் வந்தார்

நம்மைத் துருவினார் நமக்கு செலவு வைத்தார்

திருட்டைக் கொடுத்ததோடு நின்றிருக்கலாம்

இப்ப கொடுத்த புகாரையும் திரும்ப பெறமுடியவில்லை !

என்ன செய்யலாம் .....?!
கரையில் இசை நிகழ்ச்சி !

கடலில் அலையில் காற்றில் மணலில் ஆடும் குழந்தைகள் அற்புத மழலையில் நடத்தும் இசையில் நவரச சுவையில் நாடும் மனம் நாழிகையேனும் ஆடும் பாடும் !
வாழ்க தமிழ்

காலை எழுந்து "காப்பி" குடித்து

"பேப்பர் படித்து "பேஸ்டை" தேடி

"சவரில்" நனைந்து "ஸோப்பில்" குளித்து

"சரடை ' மாற்றி "பேண்டை" மாட்டி

"பேக்குடன்" கையில் "செல்போன்" எடுத்து

"பைக்கில்" ஏறி "டா..டா..." காட்டி

தலைமை தாங்கப் புறப்பட்டான்

தமிழ் வளர்ச்சி மன்றக் கூட்டமாம் !
சாமி என்ன சாதி

சாமி சன்னதி கூட்டமான கூட்டம்

சாதி தலைவரில் முன்னிலை யாருக்கு

பூமி சுறறுவதே யாருக்காம் என வாதம்

புலரும் பொழுதே எங்களுக்கு எதிரவாதம்

காமி என் பேத்தி கைபற்றி கீழ் இழுத்தாள்

காது குனிந்து என்ன் வென்றேன்

"சாமி என்ன சாதி" ரகசியமாய்க் கேட்டாள்

சரியாகத் தெரிந்தவர்கள் கூறுங்களேன் !

Thursday, July 17, 2008


அகவை எழுபத்தி ஐந்து!

எனக்கு வயது எழுபத்தி ஐந்து!

என்னுள் வியப்பு தாங்கவில்லை

எனக்கு உற்ற நிகழ்வுகள்

நான் பெற்ற அனுபவங்கள்

நினைத்துப் பார்கிறேன்

நீண்டதொரு பெரு மூச்சு

மலரும் நினைவுகளை

அசை போட்டு மகிழ்கிறேன்

ஆண்டவனுக்கு நன்றி

என்னில் பெரியோரை

வணங்குகிறேன்

எனக்கு இளையோரை

வாழ்துகிறேன்

எல்லோரும் வாழ்க

எல்லா நலனும் பெறுக

நல்லதை நினைப்போம்

நலமே வாழ்வோம் !


சென்னை-47 வாழ்க வளமுடன்
19.07.2008 கேஏசீனிவாசன்







_

Wednesday, July 16, 2008



வெள்ளைப் புலி புல்லைத் தின்னுமா !


புல்லை என்றும் மேய்வதி ல்லை

பாச்சலில் அடிக்கும் இரயைத்தான்

பசிக்கும் போது அது தின்னும்!

மனிதன் மனதுக்கு என்ன நிறம்

மாறாத கொள்கை அவனுக் குண்டா?

நினைத்ததை எல்லாம் செய்து விட்டு

நீண்ட விளக்கம் தருவது ஏன்?

அறுவை சிகிச்சை !

அப்பெண்டிக்ஸ் ஆபரேசன்

ஆகவேண்டும் உடனே என்கிறார்கள்

அவர்கள் சொன்னபடி சேர்ந்தேன்

ஆர்வம் குறைந்து அலட்சியம் ஏன் ?

பக்கத்து படுக்கைக்காரர் சொன்னார்

பார்க்க வந்த டாக்டர்கள் பேசியதை

ஆய்வு செய்து பார்த்தார்களாம்

"ஆல்ரெடி கிட்னி டேக்கனாம் "

பாதங்கள்
பட்டுபுடவை
சரசரக்க

படர்ந்த விழிகள் படபடக்க

ஒட்டிய மனது
துடிதுடிக்க

ஒப்பனையில் முகம் மினுமினுக்க

பாட்டுப்பாடும் கொலுசின் ஒலி

பார்ப்போர் வியக்கும் மருதாணி

நாட்டும் பாதம் வலது எனில்

நயமிகு வாழ்வே நனவாகும்!



நியாயம் நேர்மை

நியாயமாக சம்பாரித்து

நேர்மையாக வாழ வேண்டும்

வாழ்ந்த்துதான் பார்போம் என்று

வைராக்கியம் கொண்டான் அவன்

வாரத்தில் நான்கு நாள் அடுபெஃரிந்தது

மூன்று நாள் பூனை தூங்கியது

என்ன செய்வதெனக் கேட்டான்

எப்போதும் போலிரு என்றனர் !

நீரூறறு!

பொங்கி வழியும் நீரூறறின்

பொழிவில் எத்தனை பொலிவிருக்கு

எங்கும் சிதறும் நீர்த்திவலை

எத்தனை எத்தனை வண்ணஙகள்

கங்குல் நேரத்து கலை நடனம்

காண்போர் மனதைக் கவருவது

தங்கம் குறைந்த விலை கேட்ட

தமிழக பெண்களின் நிலை போலாம் !

Tuesday, July 15, 2008

பேராசை !

மாண்பு மிகுக்கள் வந்து போயாச்சாம்

மாடல் அழகிக்கு மடிவரை மிடியாம்

ஆண் பெண்களுக்கு வரிசை தனித்தனி

அவரவர் கையில் ஆயிரமாய் பணக்கட்டு

உண்ணாமல் சேர்த்தது உறங்காமல் காத்தது

உரிய பக்குவம் தெரிந்தே வாங்கலாம்

"பணங்காச்சி மரக்கன்று" பரபரப்பு விற்பனை

பலிகிடாயிக்குத் தான் எத்தனை பேராசை!!

புலரும் பொழுது

பொழுது புலர்ந்தது பொன்னாய்மலர்ந்தது

புறவிதழ் அவிழ நறுமணம் கமழ

எழுந்தன புட்கள் இன்னிசை பாட

ஏங்கிய தாமரை முகமது மலர

அழுங்கிய வண்டுகள் பனிசிறகுதற

ஆயிரம் மின்னொளி வண்ணமாய் மின்ன

தொழும் அடியார்கள் குணதிசை நாட

திருவடி தொழுவோம் திரை இருள் அகல!